கோல திரங்கானு, செப். 11- போலி முதலீட்டு திட்டத்தில் கவரப்பட்ட
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் 91,060 வெள்ளியை இழந்தார்.
எண்பத்தைந்து வயதான அந்த முதியவர் கடந்தாண்டு அக்டோபர் மாதம்
29ஆம் தேதி அடையாளம் தெரியாத வாட்ஸ்ஆப் எண்ணில் விளம்பரம்
ஒன்றைப் பெற்றதாகக் கோல திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி
அஸ்லி முகமது நோர் கூறினார்.
குறுகிய காலத்தில் அதிக லாபத்தை ஈட்டித் தரும் எனக் கூறப்படும்
மடினா இமாஸ் திட்டத்தில் முதலீடு செய்ய அந்த முதியவர்
ஊக்கவிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
அந்த ஆடவருக்கு வி.ஐ.பி. (பிரமுகர்களுக்கான) முதலீட்டுத் தொகுப்பில்
பங்கு பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 500
வெள்ளியை முதலீடு செய்தால் நான்கே மணி நேரத்தில் 15,800 வெள்ளியை லாபமாகப் பெற முடியும் எனக் கூறப்பட்டது.
இந்த திட்டத்தில் கிடைக்கக் கூடிய லாபத்தைக் கண்டு மதிமயங்கிப் போன
அந்த முதியவர் சந்தேக நபர் குறிப்பிட்ட பல்வேறு வங்கிக் கணக்குகளில்
26 பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை முதலீடு செய்ததாக அவர்
குறிப்பிட்டார்.
பணத்தை முதலீடு செய்து நீண்ட காலம் ஆகியும் வாக்குறுதியளித்தபடி
லாபம் கிடைக்காததைக் கண்டு அந்த முதியவர் ஏமாற்றம் அடைந்ததாக
அஸ்லி முகமது அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த முதியவர் கடந்த திங்கள்கிழமை
போலீசில் புகார் செய்ததாகக் கூறிய அவர், இப்புகார் தொடர்பில்
குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு
வருகிறது என்றார்.
இத்தகைய முதலீடுகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி
பொது மக்களைக் கேட்டுக் கொண்ட அவர், குறுகியக் காலத்தில் அதிகம்
லாபம் கிடைக்கும் எனக் கூறும் முதலீட்டுத் திட்டங்களின் நம்பகத்
தன்மை குறித்து அதிகாரிகளிடம் சரிபார்துக் கொள்ளும்படி கூறினார்.


