(ஆர்.ராஜா)
செராஸ், செப். 11 - இந்தியர்களுக்காக அதிகமான திட்டங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வெய்ன் ஓங் சுங் வெய் ஏற்பாட்டில் இங்குள்ள ஸ்ரீதீமா பொது மண்டபம் புதுப்பிக்கப்பட்டது.
பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், ரத்த தான முகாம் உள்ளிட்ட சமூக நல திட்டங்களை நடத்துவதற்குரிய வாய்ப்பினை இந்த மண்டபம் வழங்கும் என்று வெய்ன் ஓங் கூறினார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் பொங்கல் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டபோது இந்த மண்டபத்தின் கூரைப்பகுதி பழுதாகியிருந்ததைக் கண்டறிந்ததாக அவர் சொன்னார்.
"பழமையான இந்த மண்டபம் தற்போது சீரமைக்கப்பட்டதன் வழி இங்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்றுப் பயன் பெறலாம்” என்று புதுப்பிக்கப்பட்ட மண்டபத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
பலாக்கோங் இந்தியர் சமூக தலைவர் கிறிஸ்டி, காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் எட்வின் தாங் மற்றும் இதர பொறுப்பாளர்களும் உடன் இருந்தனர்.


