ஷா ஆலம், செப். 11- இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு 13ஆம் தேதி
வரையிலான காலக்கட்டத்தில் மாநிலத்திலுள்ள சாலைகளில் குழி
விழுந்த 22,418 பகுதிகளை மாநில அரசின் சாலை பராமரிப்பு நிறுவனமான
இன்ஃப்ராசெல் சென். பெர்ஹாட் சீரமைத்தது.
இக்காலக்கட்டத்தில் சாலை பழுது தொடர்பான 246 புகார்களை
இன்ஃப்ராசெல் நிறுவனம் பெற்றது. கடந்த 2023ஆம் ஆண்டில் இந்த
எண்ணிக்கை 156ஆகவும் 2022ஆம் ஆண்டில் 194ஆகவும் 2021ஆம் ஆண்டில்
105ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக கடந்த 2021 முதல் 2024 வரை 114,736 பழுதடைந்த
பகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில்
வெளியிட்ட பதிவில் கூறியது.
கோல சிலாங்கூர் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 32,550 பகுதிகள்
சீரமைக்கப்பட்ட வேளையில் அதற்கு அடுத்த நிலையில் கிள்ளான் (17,137),
சபாக் பெர்ணம் (14,924), பெட்டாலிங் (14,327), கோல லங்காட் (13,302),
கோம்பாக் (4,308), உலு சிலாங்கூர் (1,720) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
சிலாங்கூரில் சாலைகளில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்வதில் இன்ஃப்ராசெல்
சிறப்பான பணியை ஆற்றி வருகிறது. சாலையைப் பயன்படுத்துவோரின்
பாதுகாப்பை உறுதி செய்ய சாலைகளின் தரத்தை தொடர்ந்து
மேம்படுத்துவதில் பொதுப் பணித்துறையுடன் இணைந்து இன்ஃப்ராசெல்
செயல்பட்டு வருகிறது என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
மாநிலத்தில் மாபெரும் சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மாநில
அரசு 2 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக அடிப்படை வசதிகள்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் அண்மையில்
கூறியிருந்தார்.
சீரமைக்கப்படவுள்ள சாலைகளில் ஊராட்சி மன்றங்கள், மாவட்ட
அலுவலகங்கள் மற்றும் பொதுப்பணித் துறையின் அதிகார
வரம்பிற்குட்பட்டச் சாலைகளும் அடங்கும் என அவர் தெரிவித்திருந்தார்.


