ஷா ஆலம், செப். 11- இங்குள்ள செக்ஷன் 7 ஏரியின் பொழுதுபோக்குப் பகுதியில் வேறு முதலைகள் இல்லை என்று சிலாங்கூர் மாநில வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காத் துறை
(பெர்ஹிலித்தான்) கூறியது.
அந்த பகுதியில் காணப்பட்ட ஒரு முதலை பொறி வைக்கப்பட்டு
பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இரவு நேர ட்ரோன்
சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைளில் வேறு முதலைகள்
அங்கு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று பெர்ஹிலித்தான்
இயக்குநர் வான் முகமது அடிப் வான் முகமது யூசோ கூறினார்.
இம்மாதம் 4ஆம் தேதி முதலையின் நடமாட்டம் கண்டறியப்பட்டதைத்
தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த இரண்டு பொறிகள் கடந்த
சனிக்கிழமை அகற்றப்பட்டதோடு முதலையைப் பிடிக்கும் நடவடிக்கையும்
முற்றாக நிறுத்தப்பட்டது என்று பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் அவர்
குறிப்பிட்டார்.
1.68 மீட்டர் நீளமுள்ள அந்த முதலை நோயிலிருந்து விடுபட்டுள்ளது என
சோதனையில் கண்டறியப்பட்டதாகக் கூறிய அவர், டெங்கிலில் உள்ள
பாயா இண்டா சதுப்பு நிலப் பகுதியில் அது விடப்பட்டது என்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்படவில்லை.
உப்பு நீரில் வாழக்கூடிய அந்த முதலை வெள்ளத்தின் போது இந்த நன்னீர்
ஏரிக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் அல்லது பொறுப்பற்றத் தரப்பினர்
அதனை அங்கு கொண்டு வந்து விட்டிருக்கலாம் என அவர் சொன்னார்.


