(ஆர்.ராஜா)
சிலாங்கூர் செப் 11 - சிலாங்கூர் மாநிலத்திலுள்ள புக்கிட் தாகார் மற்றும் மேரி தோட்டங்களை தாம் தத்தெடுத்துள்ளதாக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
ஒவ்வொரு தலைவரும் ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்ற பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கோரிக்கையின் அடிப்படையில் இவ்விரு தோட்டங்களையும் தாம் தத்தெடுத்துள்ளதாக அவர் சொன்னார்.
அமைச்சர்கள், துணையமைச்சர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அமைச்சின் தலைமை செயலாளர்கள் போன்ற அரசு நிர்வாகத்தில் உயரிய பதவியில் இருக்ககூடியவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த கிராமத்தை தத்தெடுத்து அங்குள்ள மக்களின் மேன்மைக்கு சேவையாற்ற வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
நான் பிறந்து வளர்ந்தது பினாங்கு மாநிலத்தின் ஜோர்ஜ்டவுன் என்றாலும் தோட்டபுற மக்களுக்கு சேவை அதிகமாக பயன்படும் என்ற நோக்கிலே இவ்விரு தோட்டங்களை நான் தேர்ந்தெடுத்து அதற்கான ஒப்புதலையும் பிரதமர் துறையிடமிருந்து பெற்றுள்ளேன் என அவர் கூறினார்.
கிள்ளான், தெலுக் புலாய் நாவலர் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற 20வது மாணவர் பண்பாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை அறிவித்தார். இந்நிகழ்வில் சுமார் 800 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சரஸ்வதி, மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்த்து, எதிர்காலத்தில் சிறந்த கலைஞர்களாக உருவாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெரிதும் உதவும் என்று கூறினார்.


