ஷா ஆலம், செப் 5 - இவ்வாண்டு ஜூன் மாதம் வரை 36 லட்சம்
சுற்றுப்பயணிகள் சிலாங்கூருக்கு வருகை புரிந்துள்ளனர். ஆண்டு
இறுதிக்குள் 70 லட்சம் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் மாநிலத்தின் இலக்கை
தாண்டி விட முடியும் என்ற நம்பிக்கையை இந்த எண்ணிக்கை
ஏற்படுத்தியுள்ளது.
எழுபது விழுக்காட்டு உள்நாட்டினரை உட்படுத்திய அந்த
சுற்றுப்பயணிகளின் ஈர்ப்புக்குரிய இடங்களாக அஞ்சோங் உத்தாரா
மற்றும் அஞ்சோங் செலத்தான் எனப்படும் மாநிலத்தின் வட மற்றும் தென்
பிராந்தியங்கள் விளங்கியதாக சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
சுற்றுலா ஈர்ப்பு இடங்கள் குறித்து கேட்கப்படும் ஒவ்வொரு முறையும்
சபாக் பெர்ணம் முதல் கோல சிலாங்கூர் வரையிலான அஞ்சோங்
உத்தாரா பகுதியும் சிப்பாங் மற்றும் கோல லங்காட்டை உள்ளடக்கிய
அஞ்சோங் செலாத்தான் பகுதியும் உள்ளதாக நாங்கள் கூறுகிறோம்.
நிறைய பாரம்பரிய இடங்களை சிலாங்கூர் கொண்டுள்ளது. அது தவிர
சூழியல் சுற்றுலா மையங்களும் இயற்கை எழில் நிறைந்த இடங்களும்
இங்கு ஏராளமாக உள்ளன. ஒரு மினி மலேசியா போல் சிலாங்கூரில்
அனைத்தும் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது உள்நாட்டு சுற்றுப்பயணிகள் சிலாங்கூருக்கு அதிகமாக
வருகின்றனர். அதே சமயம் அனைத்துலகச் சுற்றுப்பயணிகளை
ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் இரட்டிப்பாக்கியுள்ளோம் என்று
அவர் சிலாங்கூர்கினியிடம் தெரிவித்தார்.
சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டு 2025 குறித்து கருத்துரைத்த
அவர், ஏர் ஆசியாவின் 15 விமானங்களில் கேபின் விளம்பரங்கள்
வாயிலாக இந்த இயக்கத்தை பிரபலப்படுத்தும் நடவடிக்கை அடுத்த மாதம்
தொடங்கும் என்றார்.
சுமார் 26 லட்சம் வெள்ளி செலவில் ஈராண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும்
இந்த விளம்பரத்தின் வாயிலாக மேலும் அதிகமான உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை சிலாங்கூர் மாநிலம் ஈர்க்க முடியும்
என்றார் அவர்.
அடுத்தாண்டு அமல்படுத்தப்படவுள்ள சிலாங்கூருக்கு வருகை தாருங்கள்
இயக்கத்தின் போது 80 லட்சம் சுற்றுப்பயணிகளை ஈர்க்கத்
திட்டமிட்டுள்ளோம். ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் மாநிலத்திற்கு வந்தால்
அது வழக்கத்திற்கு மாறான ஒரு சாதனையாக விளங்கும் என்று அவர்
சொன்னார்.


