ஷா ஆலம், செப். 2 - நாட்டின் 67வது தேசிய தினத்தை முன்னிட்டு
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மூன்று சிறார் பராமரிப்பு இல்லங்களுக்கு
அத்தியாவசிய உணவுப் பொருள்களை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர்
நிறுவனம் வழங்கியது.
கோலாலம்பூர், அன்பு சமூக நல இல்லம், பூச்சோங், ஹவுஸ் ஆஃப் ஜோய்
மற்றும் சுங்கை பூலோ ஹர்மோனி பரிவு இல்லம் ஆகியவையே ஆயர்
சிலாங்கூர் நிறுவனத்திடமிருந்து உதவிப் பெற்ற சமூக நல
இல்லங்களாகும்.
இந்த உதவித் திட்டத்தில் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தைச் சேர்ந்த எட்டு
ஹைட்ரோ ஹீரோஸ் தன்னார்வலர்கள் மற்றும் ‘சாபோட்‘ தன்னார்வலர்
அமைப்பின் எட்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த தன்னார்வலர்கள் அன்பு இல்லத்தில் சுய பாதுகாப்பு சபாரி பயிற்சிப்
பட்டறையை நடத்தினர். முதன் முறையாக நடத்தப்பட்ட இந்த திட்டத்தில்
சிறார்கள் மற்றும் இளையோர் மத்தியில் மனநல பாதுகாப்பு மீதான
அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
அதே சமயம், தேசிய தினம் மற்றும் தேசிய மாதத்தை அனுசரிக்கும்
வகையில் தேசிய தின பாடல்களைப் பாடி அந்த இல்லங்களைச் சேர்ந்த
சிறார்களை மகிழ்வித்தோம் என ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தனது
பேஸ்புக் பதிவில் கூறியது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி முதல் கிள்ளான்
பள்ளத்தாக்கில் உள்ள வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஆயர் சிலாங்கூர்
நிறுவனம் பாக்ஸ் ஆஃப் ஹோப் எனப்படும் அத்தியாவசிய உணவுப்
பொருள்கள் அடங்கிய 5,835 பெட்டிகளை விநியோகித்துள்ளது.
ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் சமூக நிறுவனக் பொறுப்புணர்வுத்
திட்டத்தின் கீழ் இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.


