ஷா ஆலம், செப் 2: கோத்தா கெமுனிங் தொகுதியில் மொத்தம் 450 குடியிருப்பாளர்கள் பிங்காஸ் மூலம் பலன்களைப் பெற்றுள்ளனர் என்று அதன் பிரதிநிதி கூறினார்.
எஞ்சிய 202 ஒதுக்கீட்டிற்கான மதிப்பாய்வை தற்போது தனது தரப்பு நடத்தி வருவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் தெரிவித்தார். இது விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"நாங்கள் 1,500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுள்ளோம், ஆனால் ஒதுக்கீடு 652 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. எனவே, அவர்கள் உண்மையிலேயே உதவி பெறத் தகுதியானவர்கள் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் மதிப்பாய்வு செய்து வருகிறோம்.
"இருப்பினும், வெற்றி பெறாத மற்றும் உதவி தேவைப்படும் விண்ணப்பங்களுக்கு உணவு கூடை திட்டத்தின் மூலம் உதவி வழங்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.
இதுவரை 7,160 பிங்காஸ் ஒதுக்கீடுகள் மீதமுள்ளதாகவும், தகுதியானவர்கள் மட்டும் 24 மாதங்களுக்கு மாதந்தோறும் RM300 பெறுவதை உறுதி செய்வதற்காக விண்ணப்பதாரர்கள் பட்டியல் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் மக்கள் நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் கூறினார்.
ஜூலை 5 அன்று, அதிகமான மக்கள் பலன் அடைவதை உறுதி செய்வதற்காக, விண்ணப்பத் தேவைகள் தளர்த்தப் பட்டதாக அன்பால் அறிவித்தார்.


