செய்தி ;ஆர்.ராஜா
ஷா ஆலம், செப். 1- நாட்டின் 67வது தேசிய தினத்தை முன்னிட்டு மோரிப் தொகுதி இந்திய சமூகத் தலைவர் எலிசா சாம்சன் இமானுவேல் ஏற்பாட்டில் ஜூக்ரா தமிழ்ப்பள்ளிக்கு 180 தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.
ஜூக்ரா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் சாம்சன் இந்த கொடிகளை தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி அந்தோணியிடம் ஒப்படைத்தார்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சதீஷ் கிருணா ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் கோல லங்காட் மாவட்ட தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் வாசு முனியாண்டி சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய சாம்சன், மாணவர்களுக்கு தேசிய தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு நாட்டுப் பற்றின் முக்கியத்துவத்தையும் தேசியக் கொடிகளை பறக்க விடுவதன் நோக்கத்தையும் எடுத்துரைத்தார்.
புரிந்துணர்வு, சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயத்தைக் கட்டிக் காத்து ஒற்றுமையை வளர்க்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பின்னர், தலைமை ஆசிரியர் திருமதி சரஸ்வதியைப் பின்பற்றி மாணவர்கள் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு ‘வாழ்க மலேசியா, வளர்க சுதந்திரம்‘ என்ற முழக்கத்துடன் பள்ளியை வலம் வந்தனர்.








