ஷா ஆலம், ஆக. 29 - மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களை தொடர மாநில அரசு கடப்பாடு கொண்டுள்ளது. அத்தரப்பினர் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதன் மூலம் சுயகாலில் நின்று சொந்தமாக வருமானம் ஈட்டுவதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கை
முன்னெடுக்கப்படுகிறது.
பதினேழு முதல் 25 வயது வரையிலான மாற்றுத் திறனாளி
இளைஞர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித்
தருவதற்காக சுய வாழ்க்கை ஆதரவு மையத் (ஐ.எல்.எஸ்.சி.) திட்டம்
கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாக சமூக நலத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் ஷாரி கூறினார்.
இதுவரை 57 மாற்றுத் திறனாளி இளைஞர்கள் காஃபே நிர்வாகம், பேக்கரி
மற்றும் தகவல் தொழில்நுட்ப மேலாண்மை ஆகிய மூன்று துறைகளில்
பயிற்சிகளை முடித்துள்ளதாக அவர் சொன்னார்.
இந்த திட்டத்தின் கீழ் அந்த இளைஞர்கள் செஷையர் சமூக நல இல்லம்,
தேசிய இளைஞர் திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தேசிய இளைஞர்
உயர் திறன் கழகம் ஆகிய இடங்களில் தங்கள் கல்வியைத் தொடர்ந்ததாக
அவர் குறிப்பிட்டார்.
பயிற்சியை முடித்த சிலர் சொந்த தொழிலில் ஈடுபட்டு வரும் வேளையில்
மற்றவர்களுக்கு தொழில்துறையினருடனான ஒத்துழைப்பின் வாயிலாக
வேலை வாய்ப்புகள் பெறப்பட்டுள்ளன என்றார் அவர்.
மாற்றுத் திறனாளி இளைஞர்கள் சுய காலில் நிற்க வேண்டும் என்பதோடு
சமூகப் பொருளாதார நடவடிக்கைகளிலும் ஈடுபாடு காட்ட வேண்டும்
என்பது எங்களின் நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடைவதில்
குடும்பத்தினர், கொள்கைகள், அரசு ஸ்தாபனங்கள் மற்றும் தொழில்துறையினரின் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளி நட்புறவு கொள்கை எதிர்வரும் டிசம்பர் மாதம்
அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகக் கூறிய அன்பால் இதன் மூலம்
அத்தரப்பினரின் நலன் காக்கப்படும் என்பதோடு சுகாதாரம், கல்வி, சட்டம்,
வேலை வாய்ப்புகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் மீது கவனம்
செலுத்தப்படும் என்றார் அவர்.


