ECONOMY

நாடு முழுவதும் ஏ,பி மற்றும் சி முட்டை விலை மூன்று காசு குறைகிறது

17 ஜூன் 2024, 5:42 AM
நாடு முழுவதும் ஏ,பி மற்றும் சி முட்டை விலை மூன்று காசு குறைகிறது

கோலாலம்பூர், ஜூன் 17- உதவித் தொகை மறுசீரமைப்பின் வழி மிச்சப்படுத்தப்படும் தொகையை மக்களுக்கே திருப்பித் தரும் அரசாங்கத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏ.பி மற்றும் சி கிரேடு முட்டையின் சில்லரை விலை 3 காசு குறைக்கப்படுகிறது.

இந்நடவடிக்கையின் வாயிலாக இன்று தொடங்கி ஏ.பி மற்றும் சி கிரேடு முட்டை முறையே 42 காசு, 40 காசு மற்றும் 38 காசாக விற்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கான உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு முட்டைக்கும் வழங்கப்படும் 10 காசு மானியத்தின் வாயிலாக அரசாங்கம் பத்து கோடி வெள்ளியைச் செலவிடும் வேளையில் கடந்த 2023ஆம் ஆண்டு முட்டைக்கு அரசாங்கம் வழங்கிய உதவித் தொகை 92 கோடியே 70 லட்சம் வெள்ளியாக இருந்தது என்று அவர் அறிக்கை  ஒன்றில் தெரிவித்தார்.

சபா, சரவா மற்றும் லபுவான் ஆகியவற்றிலும் ஆர்ஜிதம் செய்யப்பட்ட பகுதி மற்றும் பிராந்தியத்திற்கேற்ப முட்டையின் சில்லரை விலை மறுசீரமைப்பு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

நடப்பு நிலவரத்திற்கேற்ப குறிப்பாக, உற்பத்திச் செலவினம் அதாவது கோழி தீவனத்திற்கான மூலப்பொருள் விலை வீழ்ச்சி காரணமாக இந்த விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.

மக்களின் வாழ்க்கைச் செலவினத்துடன் தொடர்புடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தொடர்ந்து ஆக்ககரமன முறையில் செயல்பட்டு வரும் என்பதோடு மக்கள் அன்றாட வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைக் களைவதிலும் முனைப்புடன் செயல்படும் என்றார் அவர்.

டீசல் பதுக்கல் குறித்து கருத்துரைத்த பிரதமர், மானிய வலை டீசலை தகுதி பெறாத தரப்பினர் மோசடி செய்யும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துவதற்கு உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கடந்த மே 1ஆம் தேதி முதல் ஒப்ஸ் திரிஸ் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.  

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.