ஷா ஆலம், மே 21 - சிலாங்கூரில் உள்ள ஊராட்சி மன்றங்கள் மேற்கொண்டு வரும் சொத்து மறுமதிப்பீட்டு நடவடிக்கை வரி அதிகரிப்புக்கான அறிகுறி அல்ல என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெளிவுபடுத்தியுள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் விகிதாசாரங்களைப் பயன்படுத்திய நிலையில் தற்போதைய மதிப்பின் அடிப்படையில் சொத்துக்களை மறுமதிப்பீடு செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நிலையான நிர்வாக நடைமுறை இதுவாகும் என்று அவர் தெரிவித்தார்.
எல்லா ஊராட்சி மன்றங்களும் இந்த மறு மதிப்பீட்டிற்கு உட்பட்டவை அல்ல. அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் அண்மையில் செய்த நடைமுறை (எம்.பி.ஏ.ஜே ) கடந்த 2022ஆம் ஆண்டு காஜாங் நகராண்மைக் கழகம் செய்ததைப் பிரதிபலிக்கிறது.
இது அந்தந்த ஊராட்சி மன்றப் பகுதிகளில் உள்ள சொத்துக்களின் பூர்வாங்க மதிப்பீடாகும். சம்பந்தப்பட்ட சமூகத்தின் கருத்துகள், ஆட்சேபனைகள் அல்லது ஆலோசனைகளைப் பெறுவதற்கு இந்த மதிப்பீடு ஊராட்சி மன்றங்களுக்கு உதவுகிறது. சிலர் அஞ்சுவது போல் பிற்காலத்தில் அமல்படுத்தவிருக்கும் வரி உயர்வு பற்றிய முன்னறிவிப்பு அல்ல என்றார் அவர்.
பத்து அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து இயற்கையாகவே மாறுபடும் பராமரிப்பு செலவுகள் மற்றும் கழிவு மேலாண்மை போன்ற பல காரணங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு மறுமதிப்பீடு மிக கவனமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமிருடின் கூறினார்.


