ஷா ஆலம், மே 18- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்றும் நாளையும் எட்டு இடங்களில் நடைபெறவுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவான விலையில் வழங்கும் இந்த விற்பனை இன்று காலை 10.00 மணி தொடங்கி ஜாலான் பெங்குளு டத்தாரான் (மேரு), பாலாய் ராயா கம்போங் மலாக்கா (டுசுன் துவா), ஜாலான் 6சி/3, செக்சன் 16, பண்டார் பாரு பாங்கி (சுங்கை ராமால்), தாசேக் பாண்டான் பெர்டானா (அம்பாங்) ஆகிய இடங்களில் நடைபெறும்.
மேலும், நாளை ஞாயிற்றுகிழமை ஜாலான் டாமாய் உத்தாமா 2, கார் நிறுத்துமிடம் (கின்ராரா), பண்டார் ரிஞ்சிங் செக்சன் 2 (செமினி), ஜாலான் பெர்லிங் 1 பந்தாய் சிப்பாங் புத்ரா (சுங்கை பீலேக்) ஜாலான் டத்தோ அகமது ஹமிட் 4,அல் பராக்கா பள்ளிவாசல் எதிரே (செந்தோசா) ஆகிய இடங்களில் இந்த மலிவு விற்பனை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
வார இறுதி நாட்களில் செகி ப்ரெஷ் பேராங்காடிகளில் நடைபெறும் மலிவு விற்பனையுடன் சேர்த்து இவ்வாண்டில் மாநிலம் முழுவதும் 1,800க்கும் மேற்பட்ட இடங்களில் ஏஹ்சான் ரஹ்மா விற்பனையை நடத்த சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
கடந்தாண்டு நோன்புப் பெருநாளின் போது மலிவான விலையில் கோழி மற்றும் முட்டையை மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ததற்காக பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.
ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.


