ஷா ஆலம், மே 13- சிலாங்கூர் மாநிலத்தின் இலக்கவியல் இலக்குகளை
நோக்கி நகர்வதற்கும் நடப்புத் தேவைகளை ஈடு செய்வதற்கும் ஏதுவாக
2025 ஸ்மார்ட் சிலாங்கூர் செயல் திட்டத்தை 2030 வரை நீட்டிக்கும்
முடிவை பரிசீலிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் மாநில அரசு
ஈடுபட்டு வருகிறது.
இந்த ஆய்வுப் பணிகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில்
முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக புத்தாக்கத் துறைக்கான
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ங்கா முகமது ஃபாஹ்மி கூறினார்.
நாம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2025 வரை நாம் ஸ்மார்ட் சிலாங்கூர்
திட்டத்தை தொடங்கினோம். (பின்னர் அது 2025 ஸ்மார்ட் சிலாங்கூர்
நடவடிக்கைத் திட்டம் என கடந்த 2020இல் சீரமைப்பு கண்டது.
தற்போது நாம் இந்த திட்டத்தை 2030 வரை நீட்டிப்பது தொடர்பான
ஆய்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளோம். இவ்விவகாரத்தில் தீர்வு காண
வேண்டிய சில விஷயங்கள் இன்னும் உள்ளன. அடுத்த இரண்டு அல்லது
மூன்று மாதங்களில் இது முற்றுப்பெறும் என்று அவர் சொன்னார்.
மலேசிய இலக்கவியல் பொருளாதாரக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று
இங்கு நடைபெற்ற ஜெலாஜா சாயா டிஜிட்டல் ஷா ஆலம் எனும்
நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.
இந்த செயல் திட்டத்தின் முதல் கட்டம் மக்களின் பயன்பாட்டிற்கான
இலக்கவியல் வசதிகளை ஏற்படுத்தித் தருவதை முதன்மை நோக்கமாகக்
கொண்டிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
ஏற்படுத்தித் தரப்பட்ட வசதிகளின் ஆக்கத்தன்மை மற்றும் அவற்றினால்
மக்களுக்கு கிடைத்த அனுகூலங்களை கண்டறிவதை இரண்டாம் கட்டம்
நோக்கமாக கொண்டிருக்கும் என்றார் அவர்.
மூன்றாவது கட்டத்தில் ஸ்மார்ட் சிலாங்கூர் செயலாக்கத்தில் ஈடுபட்டுள்ள
அரசு ஊழியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்று அவர் மேலும்
தெரிவித்தார்.
இது தவிர, இலக்கவியல் துறைகளில் இளம் தலைமுறையினருக்கு
சிறந்த வேலை வாய்ப்புகளை கிடைப்பதை உறுதி செய்வது மாநில
அரசின் முக்கிய கடப்பாடாக தொடர்ந்து இருந்து வரும் எனவும் அவர்
உறுதியளித்த்தார்.


