உலு சிலாங்கூர், ஏப் 29- கோல குபு பாரு இடைத் தேர்தலை முன்னிட்டு
பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் சோக் தா அக்கூட்டணியின்
தேர்தல் கொள்கையறிக்கையை அடுத்த வாரம் வெளியிடுவார்.
தற்போது அந்த கொள்கையறிக்கை மீதான ஆய்வு மற்றும் திட்டமிடல்
பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அந்த கொள்கையறிக்கை வெளியிடப்பட்டவுடன் எங்களின் வாக்குறுதி
என்ன என்பது தொடர்பன அனைத்துத் தகவல்களையும் அனைத்து
மக்களும் அறிந்து கொள்வதை உறுதி செய்ய தேர்தல் இயந்திரம்
கடுமையாகப் பாடுபடும் என்று அவர் சொன்னார்.
இது உண்மையில் சவால்மிகுந்தப் பணியாகும். காரணமாக மறைந்த லீ கீ
ஹியோங் தனது பணிகளை செவ்வனே ஆற்றியுள்ளதோடு சமூக
நடவடிக்கைளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார் என்று அவர்
குறிப்பிட்டார்.
தேர்தல் கொள்கையறிக்கையை வெளியிடுவது தவிர்த்து மக்களின் நலன்
காப்பதற்காக கிராமத் தலைவர்கள் மற்றும் நகராண்மைக் கழக
உறுப்பினர்களுடன் அணுக்கமான நட்புறவை பேணி வருவேன் என்று
அவர் கூறினார்.
இங்குள்ள தொகுதி சேவை மையத்தில் நேற்று நடைபெற்ற கோல குபு
பாருவில் மலாய் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஜசெக கிளை
அமைப்பதற்கான விண்ணப்ப பாரங்களை பெறும் சமர்ப்பிக்கும் நிகழ்வில்
கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜசெகவின் தேசிய துணைத் தலைவர்
கோபிந்த் சிங் டியோவும் கலந்து கொண்டார்.
கோல குபு பாருவில் மலாய் வாக்காளர்களின் ஆதரவு குறித்து வினவப்பட்
போது அச்சமூகத்தின் ஆதரவு நேர்மறையாக உள்ளதாக குறிப்பிட்டார்.
இதுவரை நான் பத்தாங் காலியில் மலாய்க்காரர்கள் வசிக்கும்
பகுதிகளுக்கு வருகை புரிந்துள்ளேன். அவர்கள் அளிக்கும் ஆதரவு
சிறப்பானதாக உள்ளது. அவர்களின் வார்த்தைகளும் உரைகளும்
ஊக்கமூட்டும் வகையில் உள்ளன. ஆகவே, இத்தொகுதியை தக்க
வைத்துக் கொள்ள முடியும் என நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.


