ஷா ஆலம், ஏப் 18: சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான வாழ்க்கை முறையைக் கடைபிடிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு மதிப்பீட்டு வரி தள்ளுபடி திட்டத்தைப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி வழங்குகிறது.
எதிர்வரும் ஜூன் 24 வரை விண்ணப்பம் திறந்திருக்கும் என்று உள்ளூர் அதிகாரசபை (PBT) தெரிவித்துள்ளது. விண்ணப்பப் படிவத்தை எம்பிபிஜேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற முடியும்.
"மதிப்பீடு செய்யப்படும் அளவுகோல்கள் கழிவு மறுசுழற்சி, சோலார், மின்சார கார்களின் பயன்பாடு, மழைநீர் சேமிப்பு மற்றும் பயோடைவெர்சிட்டி அமைப்பு ஆகியவை அடங்கும்.
"விண்ணப்பப் படிவத்தை கைமுறையாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ rebat cukai@mbpj.gov.my என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், எம்பிபிஜே முகவரிக்குத் தபால் மூலமாக அனுப்பலாம்" என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.
சலுகை வரியில் 100 சதவீதம் அல்லது RM500 தள்ளுப்படி வழங்கப்படும். இச்சலுகைய பெற உரிமையாளருக்கு மதிப்பீட்டு வரி பாக்கிகள் எதுவும் இருக்கக்கூடாது.
மேலும் தகவலுக்குச் செயலகத்தை 03-7954 1440 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது எம்பிபிஜேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பார்வையிடவும்.
2011 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பெட்டாலிங் ஜெயாவைக் குறைந்த கார்பன் கொண்ட பசுமை நகரமாக மாற்றும் வகையில், பசுமையான சூழலை நோக்கி குடியிருப்பவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எம்பிபிஜே ஆசியாவிலேயே மதிப்பீட்டு வரி தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்திய முதல் பிபிடி ஆகும். மேலும் இந்த திட்டத்திற்கு 2013 இல் ``The Green Organisation London`` மூலம் ``Green Apple`` விருதைப் பெற்றது.


