சுங்கை பூலோ ஏப் 17- சுங்கை பூலோ வட்டாரத்தில் நேற்று பெய்த இடி மின்னலுடன் கூடிய அடை மழையால் கம்போங் மிலாயு சுபாங் மற்றும் கம்போங் குபு காஜா ஆகிய பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ளம் காரணமாக இவ்விரு பகுதிகளிலும் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
வெள்ளம் தொடர்பான தகவல் கிடைத்ததும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர்.ரமணன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.
நட்மா எனப்படும் பேரிடர் மேலாண்மை முகமை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்ட அவர், களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்கும்படியும் தொகுதி சேவை மைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்தும் சுங்கை பூலோ மெர்பாவ் செப்பாக் பள்ளி மண்டபத்தில் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திடீர் வெள்ளத்தில் சுமார் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொகுதி சேவை மையத்தின் மூலம் வேண்டிய உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளேன் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறை கூட்டுறவு கழகத்தின் துணை அமைச்சருமான டத்தோ ரமணன் தெரிவித்தார்.


