உலு சிலாங்கூர், ஏப் 15- ஈராண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட
ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையின் வழி சிலாங்கூர் மாநிலத்தில்
சுமார் 20 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று மந்திரி புசார் கூறினார்.
அத்தியாவசியப் பொருள்களை மலிவான விலையில் விற்பனை செய்யும்
இந்த திட்டத்தின் மூலம் அக்காலக்கட்டத்தில் சுமார் 700,000 குடும்பங்கள்
பயன் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியது என்று டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி சொன்னார்.
நாம் தற்போது நாட்டின் பொருளாதாரத்தை மீட்சியுச் செய்யும் திட்டத்தை
மெதுவாக மேற்கொண்டு வருகிறோம். உணவுப் பொருள்கள் குறிப்பாக
கோழி போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை பெருநாள்
காலங்களில் கட்டுப்பாட்டில் உள்ளதை உறுதி செய்ய இந்த திட்டம்
உண்மையாகவே உதவுகிறது என்றார் அவர்.
சிறிய அளவில் விலையேற்றம் ஏற்பட்டதற்கான சாத்தியம் உள்ளது.
எனினும் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தைப் போல் எண்ணெய், கோழி,
முட்டை போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம்
தடைபடாமலிருப்பதை அரசாங்கம் உறுதி செய்து வருகிறது என்று அவர்
குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் ஈராண்டுகளுக்கு முன்னர் ஜூவாலான் ஏஹ்சான்
ராக்யாட் திட்டம் மற்றும் தற்போது ஜூவாலான் ரஹ்மா திட்டம்
போன்றவற்றை மாநில அரசு மிக கவனமாகத் திட்டமிட்டு மேற்கொண்டு
வருகிறது என்று நேற்று தாமான் ஸ்ரீ பத்தாங் காலி சமூக மண்டபத்தில்
நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டு
உரையாற்றிய போது அவர் கூறினார்.
மாநில அரசின் இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்
பி. கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு
பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
இந்த மலிவு விற்பனைத் திட்டம் கடந்த 2022 பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி மக்கள் பரிவுத் திட்டம் என்ற பெயரில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2022 ஆகஸ்டு 30ஆம் தேதி அது ஜூவாலான் ஏஹ்சான் ரஹ்மா என பெயர் மாற்றம் கண்டது.


