புத்ராஜெயா, ஏப் 5 - நாடு முழுவதும் உள்ள 302 இடங்களில் நேற்று
தொடங்கப்பட்ட நோன்புப் பெருநாள் ரஹ்மா விற்பனைத் திட்டம் (பி.ஜே ஆர் ) வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.
அசல் சில்லறை விலையிலிருந்து 10 முதல் 30 விழுக்காடு வரையிலான விலைக் கழிவில் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை இந்தத் ரஹ்மா விற்பனைத் திட்டம் வழங்குகிறது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமது அலி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
இந்த நோன்புப் பெருநாள் விற்பனையில் உலர் உணவுப் பொருள்கள் தவிர, பெருநாளுக்குத் தேவையான கோழி, மாட்டிறைச்சி, அரிசி மற்றும் மசாலா போன்ற அத்தியாவசியப் பொருள்களும் விற்பனைக்கு வைக்கப்படும் என்று அவர் சொன்னார்.
உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு இவ்வாண்டு பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நோன்புப் பெருநாள் ரஹ்மா திட்டத்தை அமல் செய்வதன் மூலம் 'பாயோங் ரஹ்மா மடாணி' முன்னெடுப்பை விரிவுபடுத்துகிறது என்று அர்மிஸான் கூறினார்.
இந்த மலிவு விற்பனை ஜோகூர் மாநிலத்தின் 21 இடங்களில் நடத்தப்படும் வேளையில் கெடாவில் 18 இடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இது தவிர கிளந்தான் (14 இடங்கள்); கோலாலம்பூர் (4 இடங்கள்); மலாக்கா (13 இடங்கள்); பகாங் (15 இடங்கள்); பேராக் (25 இடங்கள்); பெர்லிஸ் (3 இடங்கள்); பினாங்கு (42 இடங்கள்); சபா (29 இடங்கள்); சரவாக் (45 இடங்கள்); சிலாங்கூர் (36 இடங்கள்); திரெங்கானு (22 இடங்கள்); நெகிரி செம்பிலான் (13 இடங்கள்) ஆகியவற்றுடன் புத்ராஜெயா மற்றும் லாபுவானில் தலா ஒரு இடங்களில் இந்த
மலிவு விற்பனை நடைபெறும்.


