ஷா ஆலம், ஏப் 4 - இங்கு செக்சன் 14இல் தபால் தலை
அருங்காட்சியகத்தை அமைக்கும் பணி தாமதம் அடைந்ததற்கு நடமாட்டக்
கட்டுப்பாட்டு ஆணையும் (எம்.சி.ஓ.) ஒரு காரணமாகும். இதனால்
இத்திட்டம் பூர்த்தியடைவதற்கான காலத்தை நீட்டிக்க வேண்டிய நிலை
ஏற்பட்டது.
சிலாங்கூர் மாநிலத்தின் முதலாவது தபால் தலை அருங்காட்சியமாக
விளங்கும் இதன் கட்டுமானப் பணிகள் தற்போது 65 விழுக்காடு
பூர்த்தியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் அது முழுமை
பெறும் என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
பொர்ஹான் அமான் ஷா கூறினார்.
கட்டுமானப் பணிகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட கால தாமதம் ஏற்பட்ட
போதிலும் தற்போது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதோடு அதன்
மேம்பாடு அணுக்கமாக கண்காணிக்கப்பட்டும் வருகிறது என்று அவர்
சொன்னார்.
இந்த அருங்காட்சியகத் திட்டம் இவ்வாண்டிற்குள் பூர்த்தியடைய
முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தொழிலாளர் பற்றாக்குறை
காரணமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் பணிகள்
தாமதமடைந்தன என்று பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் அவர்
கூறினார்.
அந்த அருங்காட்சியக கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது
உண்மைதான். இருப்பினும் தற்போது பணிகள் சீராக நடைபெற்று
வருவதோடு அதனை பொதுப்பணி இலாகா அணுக்கமாக கண்காணித்தும்
வருகிறது என்று அவ குறிப்பிட்டார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தவிர்த்து இதர தொழில்நுட்ப
விஷயங்களும் இந்த தாமதத்திற்கு காரணமாக அமைந்தன என்று அவர்
சொன்னார்.
எனினும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு
செய்யும்படி குத்தகையாளருக்கு கடுமையான எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
சிலாங்கூர் மாநிலத்தின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைப்
பாதுகாக்க மூன்று அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்று
பொர்ஹான் முன்னதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


