ஷா ஆலம், ஏப் 1- ஷா ஆலம் மாநகரிலுள்ள 300 மோட்டார்
சைக்கிளோட்டிகள் நாளை இலவசமாகப் பெட்ரோலை நிரப்பிக்
கொள்வதற்குரிய வாய்ப்பினைப் பெறுவர்.
இந்த இலவச பெட்ரோல் வழங்கும் நிகழ்வு நாளை காலை 10.30 மணி
முதல் இங்குள்ள செக்சன் 7, சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்)
அருகிலுள்ள பெட்ரோனாஸ் நிலையத்தில் நடைபெறும் என்று ஷா ஆலம்
மாநகர் மன்றம் கூறியது.
‘ஜோம் ஈசி மின்யாக் மோட்டார் சைக்கிள்‘ எனும் எனும் இந்த இயக்கத்தில்
பங்கு கொண்டு பயன்பெறும்படி மோட்டார் சைக்கிளோட்டிகளை அது
கேட்டுக் கொண்டது.
முதலில் வரும் 300 மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு மட்டுமே இந்த
சலுகை வழங்கப்படும் என்று மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பதிவில்
தெரிவித்தது.
மேலும், ரமலான் மாதம் முழுவதும் கார் நிறுத்த அபராதங்களுக்கு 20
வெள்ளி அபராதக் கழிவு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குற்றங்களுக்கு 70
விழுக்காடு வரை கழிவு ஆகிய சலுகைகளும் வழங்கப்படும் என மாநகர்
மன்றம் முன்னதாகக் கூறியிருந்தது.
பொது மக்கள் குற்றப்பதிவுகளுக்கான அபராதத் தொகையை விரைந்து
செலுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கிலான இந்த சலுகை மார்ச் 12 முதல்
ஏப்ரல் 9 வரை அமல்படுத்தப்படுவதாக அது குறிப்பிட்டது.


