ஷா ஆலம் மார்ச் 19- சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ் கல்விக்காக சிறப்பு செயலகம் ஒன்றை அமைக்க ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பராயிடு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை 10.30 அளவில் தமிழ்ப்பள்ளி தனி மேம்பாட்டு நடுவத் தலைவர் ( Centre For Tamil School Excellence) அருண் துரைசாமி தலைமையில் மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் மன்ற தலைவர் எஸ்.எஸ். பாண்டியன், மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் பேரவையின் துணைத் தலைவர் குமரன் மாரிமுத்து, மலேசியத் தமிழ் அமைப்புகளின் பேரவைச் செயலர் டாக்டர் குமரன் வேலு ஆகியோருடன் நேற்று நடத்திய சந்திப்பின்போது அவர் இந்த இணக்கத்தை தெரிவித்தார்
சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பலவேறு சிக்கல்களுக்குத் குறிப்பாக பள்ளிகள் இடமாற்றம், நிலப்பிரச்சனை, கணினி வகுப்புக்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவின் ஆசியுடன் இந்திய சமூகத்தின் அரசியல் சாரா இயக்கங்களின் முக்கிய நிகராளி களைக் கொண்ட ஒரு குழு உருவாக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை விடுக்கப்பட்டது .
மேலும் தமிழ்க்கல்வி மாநாடு ஒன்று சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஆதரவுடன் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும். அதில் தமிழ்க்கல்வி எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு , திட்டங்கள், தரவுகள், அடைவு குறியீடுகள், மாணவர் நலன் குறித்து ஆய்வுக் கட்டுரைகளும் பரிந்துரைகளும் இடம்பெற வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மாண்புமிகு பாப்பாராய்டு அவர்கள் இது குறித்து ஆராயப்படும் என்று கருத்து தெரிவித்தார்.
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் கணினிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதையும் மாணவர்கள் கற்பதற்கு புதிய கணினிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




