ஹாங்காங், மார்ச் 8- ‘புரோகிராம் ரெஸிடன்சி ராக்யாட்‘ (பி.ஆர்.ஆர்.)எனும்
பெயரிலான புதிய பொது வீடமைப்பு மாதிரியை வீடமைப்பு மற்றும்
ஊராட்சித் துறை அமைச்சு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த பி.ஆர்.ஆர் திட்டம் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டதாகவும்
நிலையானதாகவும் வசிப்பதற்கு உகந்தவையாகவும் பசுமை நிறைந்த
இடங்கள், சமூக மையம் மற்றும் பிற வசதிகளைக் கொண்டதாகவும்
இருக்கும் என்று அதன் அமைச்சர் ங்கா கோர் மிங் கூறினார்.
இந்த பி.ஆர்.ஆர். வீடுகளுக்கான கட்டுமானச் செலவும் 300,000 வெள்ளியாக
நிர்ணயிக்கப்படும் எனக் கூறிய அவர், இதன் மூலம் குறைந்த வருமானம்
பெறும் குடும்பங்கள் கட்டுபடி விலையில் வீடுகளை வாங்குவதற்குரிய
வாய்ப்பு கிட்டும் என்றார்.
இந்த புதிய பி.ஆர்.ஆர். திட்டத்தின் கீழ் 300,000 வெள்ளி செலவு பிடிக்கக்
கூடிய வீடுகள் 60,000 வெள்ளி விலையில் விற்கப்படும். அதில் 10,000
முதல் 15,000 வெள்ளி பராமரிப்பு மற்றும் செலவின நிதிக்காக
ஒதுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய பி.ஆர்.ஆர். வீடுகளை பத்தாண்டுகளுக்கு விற்க முடியாது என்ற
நிபந்தனையும் விதிக்கப்படும். இந்த வீட்டுமைத் திட்டங்களுக்கு அரசாங்கம்
மிகப்பெரிய தொகையை மானியமாக வழங்குகிறது. நமது இந்த சமூக
சேவையை சில பொறுப்பற்றத் தரப்பினர் தங்களுக்கு சாதகமாக
பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதற்காக இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
இங்கு நடைபெறும் ஆசிய சொத்துடைமைத் தலைவர்களின் ஹாங்காங்
மற்றும் சீனாவின் ஷென்ஸன் ஆய்வுப் பயண நிகழ்வில் அவர் இதனை
தெரிவித்தார்.
750 சதுர அடி அளவிலான இந்த பி.ஆர்.ஆர். வீடுகள் மூன்று அறைகள்
மற்றும் இரு குளியலறைகளைக் கொண்டிருக்கும் என்று அவர் மேலும்
சொன்னார்.
டிரான்சிட் எனப்படும் வழிமாற்று மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக
தொடர்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன் மூலம்
இக்குடியிருப்புகளில் வாகனங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களை
குறைக்க இயலும் என்று அவர் தெரிவித்தார்.




