ஷா ஆலம், மார்ச் 8 - புக்கிட் புத்ரா ரவாங்கில் உணவகம் ஒன்றின் எதிரே
உள்ள கார் நிறுத்துமிடங்களில் வைக்கப்பட்ட மேசை மற்றும்
நாற்காலிகளை செலாயாங் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்தது.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் 20
மேசைகள் மற்றும் 73 நாற்காலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக 1974ஆம் ஆண்டு
சாலை,வடிகால் மற்றும் கட்டிடச் சட்டப் 46(1)(டி) பிரிவின் கீழ்
இந்நடவடிக்கையை எம்.பி.எஸ். மேற்கொண்டது.
மேலும், உணவு வளாகத் துணைச் சட்டம், 1974ஆம் ஆண்டு சாலை,
வடிகால் மற்றும் கட்டிடச் சட்டம், 2007ஆம் ஆண்டு அங்காடித்
துணைச்சட்டம் 3, உணவுக் கையாளுதல் துணைச் சட்டம் ஆகியவற்றின்
கீழ் நான்கு குற்றப்பதிவுகளும் அந்த உணவகத்திற்கு வழங்கப்பட்டன.
தமது தரப்பு தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வரும்
என்றும் தவறுகளைப் புரியும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் நகராண்மைக் கழகம் எச்சரித்தது.




