ஷா ஆலம், மார்ச் 8 - ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 119 பணியாளர்கள்
2023ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான விருதைப் (ஏபிசி) பெற்றனர்
இந்த சிறப்பு விருதினைப் பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் 1,000
வெள்ளி ரொக்கம், 400 வெள்ளி மதிப்பிலான பி.எஸ்.என். சேமிப்பு பிரீமியச்
சான்றிதழ் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவை வழங்கப்பட்டன.
மேலும் 19 ஊழியர்களுக்கு சேவைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.
அவர்கள் 400 வெள்ளி ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுக்
கொண்டனர்.
மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம் தலைமையில்
நடைபெற்ற இந்த நிகழ்வில் ஷா ஆலம் டத்தோ பண்டார் செரேமி
தர்மானும் பங்கு கொண்டார்.
சிறந்த சேவைக்கான விருதைப் பெற்றவர்களுக்கு தனது பாராட்டுகளைத்
தெரிவித்துக் கொண்ட டத்தோ ஹரிஸ், மேலும் சிறப்பான முறையில்
சேவையாற்றுவதற்குரிய உத்வேகத்தை அனைத்துப் பணியாளர்களுக்கும்
இந்த நிகழ்வு ஏற்படுத்தும் என்றார்.
இந்த வெற்றியின் வாயிலாக மனநிறைவு கொண்டுவிட வேண்டாம் என
விருது பெற்றவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கு மேலும்
சிறப்பான முறையில் சேவையாற்றுவதற்குரிய முயற்சிகளை அவர்கள்
தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
ஸ்ரீ மூடாவில் வெள்ளத்தை தடுப்பது மற்றும் மக்கள் அடுக்குமாடி
குடியிருப்பு பிரச்சனைக்ளுக்குத் தீர்வு காண்பது போன்ற சிறிய
பிரச்சனைகளாக இருந்தாலும் அவற்றுக்குத் தீர்வு காண்பதில் ஊழியர்கள்
முழு ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதோடு வெற்றியையும் பெற
வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.




