ஷா ஆலம், மார்ச் 6: இந்த ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரை நடைபெறவுள்ள ``சிலாங்கூர் பெமெச்சுட் திட்டத்தின்`` (எஸ்ஏபி) கீழ் மொத்தம் 50 தொடக்க நிறுவனங்கள் இலவசப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதலில் பங்கேற்கவுள்ளன.
இத்திட்டம் கார்பன் வர்த்தகம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்சார வாகனங்கள், ஸ்மார்ட் விவசாயம் மற்றும் மறுசுழற்சி நடவடிக்கை ஆகியவற்றை வலியுறுத்துகிறது என முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.
“அனைத்து தொடக்க நிறுவனங்களுக்கும் விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் நடைபெறும் விளக்கக்காட்சி அமர்வுக்கு 20 நிறுவனங்கள் பட்டியலிடப்படுவதற்கு முன்னர் மொத்தம் 50 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அங்கிருந்து 10 வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்போம்" என இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் இங் சி ஹான் கூறினார்.
அஸ்மிசாம் ஜமான் ஹுரியின் கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்தத் திட்டமானது 17 பயிற்சித் தொகுதிகளைக் கொண்டிருப்பதாகவும், தொழில்துறை பயணத்தில் பங்கேற்பதோடு, மூலதனம் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 10 நிபுணர்களின் வழிகாட்டியால் வழிநடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
இத்திட்டம் 2018 இல் ஏற்பாடு செய்யப்பட்டதிலிருந்து கடந்த ஆண்டு வரை, மொத்தம் 190 தொடக்க நிறுவனங்கள் பயிற்சி பெற்றதாகவும், அவற்றில் 61 நிறுவனங்கள் மானியங்கள், மூலதன நிதிகள் மூலம் ஆரம்ப முதலீட்டைப் பெற்றதாகவும் அவர் விளக்கினார்.




