ஷா ஆலம், மார்ச் 5: எதிர்வரும் ஆகஸ்ட் 17 முதல் 24 வரை நடைபெறவுள்ள 21வது மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) மொத்தம் 1,138 சிலாங்கூர் விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்வர்.
இந்த முறை சரவாக்கில் நடைபெறும் இப்போட்டி 37 விளையாட்டுகளுடன் வரலாற்றில் மிக அதிகமான போட்டிகளை கொண்டது என விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
"நாங்கள் முதல் மூன்று நிலையில் வெற்றி பெறும் அணிகளாக இருக்க வேண்டும். கடந்த சுக்மா பதிப்பில், நாங்கள் நான்காவது இடத்தில் இருந்தோம், இந்த முறை நாங்கள் முன்னேறுவோம்," என்று அவர் கூறினார்.
நேற்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற (டிஎன்எஸ்) அமர்வில் விளையாட்டுக்கான மாநிலக் குழுவின் தயார்நிலை தொடர்பான ஶ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் சலிம்மி சே அட்ஜ்மி@அஸ்மியின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
போட்டிக்கு தயாராகும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள மாநில அரசு மொத்தம் 8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியதாக நஜ்வான் கூறினார்.
"சபா (RM27.2 மில்லியன்), சரவாக் (RM23.1 மில்லியன்) மற்றும் திரங்கானு (RM20 மில்லியன்) உள்ளிட்ட சவாலான மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இந்த தொகை குறைவாகும்.
கடந்த மாதம், சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சில் கொரியாவின் ``Gyeonggido Sports Council (GSC)`` உடன் SUKMA க்கு தயாராகும் வகையில் விளையாட்டு அறிவியல் மற்றும் தடகள மேம்பாட்டில் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.




