ஷா ஆலம், மார்ச் 4 - இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை 60,843
வீடுகளை உள்ளடக்கிய ரூமா சிலாங்கூர் கூ திட்டங்கள்
அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சட்டமன்றத்தில் இன்று
தெரிவிக்கப்பட்டது.
அவற்றில் 37,008 வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு
உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வீடமைப்புத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.
எஞ்சிய வீடுகள் இன்னும் நிர்மாணிப்பில் உள்ள வேளையில் இவ்வாண்டு
இறுதிக்குள் மேலும் 5,997 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளை நிறைவு
செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 2029ஆம் ஆண்டுக்குள் 200,000 சிலாங்கூர் கூ வீடுகளை
நிர்மாணிக்கும் இலக்கை அடைய முடியும் என நம்புகிறோம். காரணம்
கடந்த ஜனவரி வரை 60,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அங்கீகாரம்
வழங்கப்பட்டு விட்டது என்று அவர் சொன்னார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று புக்கிட் காசிங் உறுப்பினர் ராஜிவ்
ரிக்சியாகாரான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு
குறிப்பிட்டார். 200,000 சிலாங்கூர் கூ வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்ற
மாநில அரசின் தேர்தல் வாக்குறுதியின் நிலை குறித்து அவர்
கேள்வியெழுப்பியிருந்தார்.
மாநிலத்திலுள்ள அனைத்து மக்களும் வசதியான மற்றும் பாதுகாப்பான
குடியிருப்பை பெறுவதை உறுதி செய்வதற்காகக் கட்டுபடி விலை
வீடமைப்புக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தியுள்ளதாக மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.




