கோல சிலாங்கூர், பிப் 27- மக்களின் வசதி மற்றும் பாதுகாப்பை கருத்தில்
கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த சாலைகளைச்
சீரமைக்கும் பணிகளை மாநில அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.
இந்த சீரமைப்பு பணி, சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளை சரிசெய்வதை
மட்டுமின்றி இதர அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கும் என்று
அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம்
கூறினார்.
சாலைகளை தரம் உயர்த்தும் பணிக்காக மாநில அரசு ஒவ்வோராண்டும்
ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்கிறது. இந்த நிதியைக் கொண்டு
சாலை கட்டமைப்பை தரம் உயர்த்த மட்டுமே முடியும். இதர அனைத்துப்
பணிகளையும் மேற்கொள்ள இந்த நிதி ஒதுக்கீடு போதாது என்று அவர்
சொன்னார்.
உடனடியாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு
மோசமான நிலையில் உள்ள சாலைகளின் பட்டியலை தாங்கள் தயாரித்து
வருவதாக நேற்று இங்கு நீர் ஆதார உத்தவாதத் திட்டத்தைப்
பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தைப் பொறுத்த வரை நூற்றுக்கணக்கான சாலைகளில்
பாதிக்கும் மேற்பட்டவை ஆயுள் காலம் காலாவதியானவையாக உள்ளன.
ஒரு சாலையின் ஆயுள் காலம் 20 முதல் 25 ஆண்டுகள் வரை மட்டுமே
ஆகும் என்றார் அவர்.
நாம் சாலைகளைச் சீரமைக்க முடியும். ஆனால், அவற்றை ஒரு
சமயத்தில் மேற்கொள்ள இயலாது. தற்போதைக்குத் தரம் உயர்த்த
வேண்டிய நிலையில் உள்ள மோசமான சாலைகளை மட்டுமே
அடையாளம் கண்டு வருகிறோம் என அவர சொன்னார்.
கடந்தாண்டு மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கிய
பகுதிகளில் சாலை சீரமைப்புப் பணிகளை மாநில அரசு பெரிய அளவில்
மேற்கொண்டது. மொத்தம் 118 சீரமைப்புத் திட்டங்கள் வாயிலாக மொத்தம்
94.9 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சாலைகள் செப்பனிடப்பட்டன.




