கோலாலம்பூர், பிப் 26: ரம்ஜான் பஜார் வளாகத்தை வேறு தரப்பினருக்கு வாடகைக்கு விடுபவர்கள் மீது கோலாலம்பூர் நகர மன்ற (டிபிகேஎல்) கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் அபிடின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் ரம்ஜான் பஜார் தளத்தை பொறுப்பற்ற தரப்பினர் மற்ற வணிகர்களுக்கு அதிக கட்டணத்தில் வாடகைக்கு விட்டுச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
"இந்த ஆண்டு நாங்கள் கடுமையாக இருக்க வேண்டும் என்று டிபிகேஎல் அமலாக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். அத்தளங்களை மற்றவர்களுக்கு வாடகைக்கு விடும் வியாபாரிகளைக் கண்டறிந்தால், உடனடியாக உரிமத்தை பறிமுதல் செய்வோம். மேலும் வணிகம் செய்ய அனுமதிக்க மாட்டோம்.," என்று டிபிகேஎல் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற பள்ளிக்குத் திரும்பும் நன்கொடை நிகழ்ச்சிக்குப் பிறகு சந்தித்தபோது கூறினார்.
சம்பந்தப்பட்ட பிரச்சனையைச் சமாளிப்பது சவாலானதாகக் காணப்பட்டாலும், டிபிகேஎல் அமலாக்கத்தைச் செயல்படுத்த ஒரு பணிக்குழுவைக் கொண்டுள்ளது என்று அஸ்மான் கூறினார்.
"வணிகத் தளங்களை வாடகைக்கு விடுபவர்கள் மற்றும் உரிமங்களை விற்பவர்களளை எங்களால் அடையாளம் காண முடியாது, ஏனென்றால் அவர்கள் மற்றவர்களுக்குத் தளங்களை வாடகைக்கு விட்டிருந்தாலும், அந்நபர் பிடிபடும்போது, குறிப்பிட்ட உரிமதாரருடன் தான் வேலை செய்வதாகத் தெரிவிக்கிறார்.
"எனவே, நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால் இது மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய முயற்சிக்கிறோம்," என்று அவர் கூறினார்.
- பெர்னாமா




