ஷா ஆலம், பிப் 26 - கச்சா நீர் உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் நீர் தூய்மைக் கேட்டுப் பிரச்சனைகளுக்கு வெற்றிகரமாகத் தீர்வு காணப்பட்டுள்ளதோடு நீர் சுத்திகரிப்பு மையங்கள் மூடப்படும் அபாயமும் தவிர்க்கப்பட்டது.
மாநில அரசின் ஆக்ககரமான இந்நடவடிக்கையின் மூலம் நீர் விநியோகத் தடை குறைக்கப்பட்டுள்ளதோடு மாநில மக்களுக்குக் குறிப்பாகக் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள குடியிருப்புகளுக்குச் சுத்தமான நீரை விநியோகிக்கும் வாய்ப்பும் கிட்டியுள்ளது.
இந்த கச்சா நீர் உத்தரவாதத் திட்டம் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் போது அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் (லுவாஸ்) தனது பந்தாஸ் எனப்படும் விரைவு நடவடிக்கை குழுவின் வாயிலாக நீர் ஆதாங்கள் மீது 24 மணி நேர கண்காணிப்பை மேற்கொள்கிறது.
லுவாஸ் தனது பந்தாஸ் விரைவு சோதனைப் பிரிவின் வாயிலாக கடந்த 2021ஆம் ஆண்டு மஞ்சள் குறியீடு என வகைப்படுத்தப்பட்ட 58 நீர் தூய்மைக்கேட்டுச் சம்பவங்களுக்கு தீர்வு கண்டுள்ள வேளையில் 2022ஆம் ஆண்டில் 63 சம்பவங்களையும் 2023ஆம் ஆண்டு 49 சம்பவங்களையும் அடையாளம் கண்டு தீர்வு கண்டுள்ளது. இவ்வாண்டில் முதல் இரு மாதங்களில் இந்த மஞ்சள் குறியீடு தொடர்பான ஐந்து நீர் தூய்மைக்கேட்டுக் சம்பவங்களுக்கு அது தீர்வு கண்டுள்ளது.
அதே சமயம் கடந்த 2019 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் மஞ்சள் குறியீட்டை உள்ளடக்கிய 21 நீர் தூய்மைக்கேட்டுச் சம்பவங்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் குறியீடு என்பது நீர் சுத்திகரிப்பு மையங்களில் சுத்திகரிப்பு பணியை நிறுத்தாத வகையில் நீர் மாசுபாட்டை அடையாளம் கண்டு அதற்கு தீர்வு காண்பதைக் குறிக்கிறது.




