ஷா ஆலம், பிப் 26 - மந்திரி புசார் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள
சுபாங் எம்பயர் ஹோட்டலில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற நிர்வாக
மற்றும் தொடர்பு திறன் மேம்பாட்டு பயிற்சியில் 34 சட்டமன்றத்
தொகுதிகளின் சேவை மைய அதிகாரிகள் மற்றும் 14 சட்டமன்றத்
தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களை உள்ளடக்கிய 100 பேர் கலந்து
கொண்டனர்.
தொகுதி சேவை மைய அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களின்
சேவைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த திறன் மேம்பாட்டுப்
பயிற்சி நடத்தப்பட்டதாக மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் சைபுடின்
ஷாபி முகமது கூறினார்.
இதற்கு முன்னர் நடத்தப்பட்ட கள சந்திப்பு நிகழ்வுகளின் போது
கிடைக்கப்பெற்ற கருத்துகளின் அடிப்படையில் அரசாங்க திட்டங்கள்
மற்றும் கொள்கைகளை மக்களிடம் சேர்க்கும் நோக்கில் இந்தப்
பயிற்சியை மேற்கொள்ளும் எண்ணம் எங்களுக்கு உதயமானது என்று
அவர் குறிப்பிட்டார்.
முதன் முறையாக நடத்தப்பட்ட இந்த திட்டத்திற்குப்
பங்கேற்பாளர்களிடமிருந்து நேர்மறையான கருத்துகள் கிடைத்தன.
அடுத்தக் கட்டமாகச் சமூக ஊடகங்களில் செய்திகளை எவ்வாறு
வெளியிடுவது, அந்த செய்திகள் பொது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு
ஏதுவாக கவர்ச்சிமான தலைப்புகளைப் பதிவிடுவது உள்ளிட்ட திறன்
மேம்பாட்டுப் பயற்சிகள் அடுத்தக் கட்டமாக அவர்களுக்கு வழங்கப்படும்
என்றார் அவர்.
முதன் முறையாக நடத்தப்பட்ட இந்த திறன் பயிற்சித் திட்டத்தை மாநில
சட்டமன்ற சபாநாயகர் லாவ் வேங் சான் முடித்து வைத்தார். இந்த
நிகழ்வின் நெறியாளர்களாக மீடியா சிலாங்கூர் தலைமைச் செயல்முறை அதிகாரி முகமது ஃபாரிட் அஸ்ரி மற்றும் மீடியா சிலாங்கூர் குழுமத்தின் பிரதான ஆசிரியர் ஃபாத்தி அரிஸ் ஓமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.




