ஷா ஆலம், பிப் 19: சபாக் பெர்ணம் பகுதியின் மேம்பாட்டு திட்டம் (சாப்டா) சுமார் RM1.9 பில்லியன் முதலீட்டையும் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு 3,600 வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.
முதல் சிலாங்கூர் திட்டத்தில் (RS-1), விவசாயத் திட்டங்களை ஆதரிப்பதன் மூலமும் நீலப் பொருளாதாரத்தை முன்னேற்றுவதன் மூலமும் சிலாங்கூர் உணவுப் பாதுகாப்பைச் சாப்டா உறுதி செய்யும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூரின் முக்கிய பொருளாதார மண்டலங்களில் ஒன்றான இந்த மெகா திட்டம், கடல் உணவுப் பொருட்களின் உற்பத்தி உட்பட மாவட்டத்தின் மீன்பிடித் தொழிலையும் மேம்படுத்துகிறது என்று அமிருடின் விளக்கினார்.
"இது சுற்றுச்சூழலுக்குக் குறைந்த தாக்கத்துடன் இகோ சுற்றுலா மற்றும் விவசாயத்தையும் ஊக்குவிக்கிறது," என்று அவர் இன்று முகநூலில் தெரிவித்தார்.
மேலும், சுங்கை பஞ்சாங் மின்மினிப் பூச்சி பாதுகாப்பு மையம், பான் கேனேல் இகோ சுற்றுலாத் திட்டம் மற்றும் சிலாங்கூர் அக்ரோ ஸ்மார்ட் பார்க் ஆகியவை உருவாக்கப்பட்ட உள் கட்டமைப்புகளில் அடங்கும்.
"அதுமட்டுமின்றி, சிகிஞ்சான் உயர் தொழில்நுட்ப மீன்பிடி மையம், ஆயர் மானிஸ் வணிக மையம் மற்றும் சுங்கை லாங்கில் படகுகள் அல்லது மீன்பிடி கப்பல்களின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கான உள்ளூர் மையம் ஆகியவையும் அடங்கும்.
இத்திட்டம் உயர் மதிப்பு பொருட்களை அதிகரிப்பது, ஆதரவு சேவைகள், நீர்நிலை தொழில் மற்றும் விவசாய தளத்தை மேம்படுத்துதல், சுற்றுலா துறையை மேம்படுத்துவது மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை அதிகரிப்பது போன்ற ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது.




