கோல சிலாங்கூர், பிப் 19 - ஜெராம் தொகுதியில் இன்று ஏற்பாடு
செய்யப்பட்ட ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையில் சுமார் 300 பேர்
கலந்து குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச்
சென்றனர்.
டேசா கோல்பீல்டு எம்.பி.கே.எஸ். மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
இந்த மலிவு விற்பனையில் கலந்து கொள்வதற்காக காலை 8.00 மணி
முதல் பொது மக்கள் வரிசையில் காத்திருந்ததாக கோல சிலாங்கூர்
நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி முகமது மஸ்கோர் துமிரான்
கூறினார்.
சந்தையில் அரிதாக கிடைக்கக்கூடிய முட்டை மற்றும் அரிசியை
குறைந்த விலையில் பெறுவதற்குரிய வாய்ப்பினை ஏறக்குறைய
அனைத்து பொது மக்களும் பெற்றனர்.
இந்த ஆண்டில் இதுவரை மூன்று முறை இந்த மலிவு விற்பனை
நடத்தப்பட்டுள்ளது. பொது மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக்
குறைப்பதற்காக இந்த விற்பனையை மேலும் அதிக முறை ஏற்பாடு
செய்ய நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். என்று அவர்
சொன்னார்.
இந்த ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனைக்குப் பொது மக்கள் மத்தியில்
அமோக வரவேற்பு கிடைத்து வருவதைக் கருத்தில் கொண்டு ‘பாடு‘
எனப்படும் முதன்மைத் தரவுத் தளம் மற்றும் டாருள் ஏஹ்சான் இலவச
நீர் விநியோகத் திட்டத்தில் பொது மக்களைப் பதிவு செய்யும்
நடவடிக்கையையும் தாங்கள் இங்கு மேற்கொண்டதாக அவர் கூறினார்.
இந்த திட்டங்களின் வாயிலாகக் கிடைக்கக் கூடிய அனுகூலங்கள் குறித்து
பலர் இன்னும் அறியாமலிருக்கின்றனர். இது குறித்து அவர்களுக்கு
நாங்கள் விளக்கமளித்ததோடு நவீன தொழில்நுட்பதைப் பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கு இத்திட்டத்தில் பதிவு செய்யவும் உதவினோம்
என்றார் அவர்.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி
கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00
வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ
சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் ஐந்து கிலோ அரிசி 13.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.




