பெட்டாலிங் ஜெயா, பிப் 19: சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐயின் பள்ளிக்குத் திரும்பும் உதவிக்கான விண்ணப்பம் இவ்வாரம் முதல் திறக்கப்படும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த (B40) 16,800 மாணவர்களுக்கு உதவும் இத்திட்டத்திற்குச் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அல்லது மாநில சட்டமன்ற ஒருங்கிணைப்பாளரிடம் விண்ணப்பிக்கலாம் என சாய்போல்யாசன் எம் யூசோப் தெரிவித்தார்.
"அடுத்த வாரம் RM100 மதிப்புள்ள பள்ளி உபகரணங்களை வழங்கும் சிறப்பு உதவித் திட்டம் செயல்படுத்தப்படும் .
"இந்த உதவி ஒவ்வொரு தொகுதிக்கும் 300 மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும், அவர்கள் பள்ளி உடைகள் அல்லது தேவையான உபகரணங்களை வாங்க விண்ணப்பிக்கலாம்," என்று அவர் கூறினார்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 16,800 மாணவர்களுக்கு RM1.7 மில்லியன் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக எம்பிஐ அறிவித்தது.
கடந்த ஆண்டு, சிலாங்கூர் மக்கள் கல்வித் திட்டம், பள்ளி உதவி மற்றும் உள்கட்டமைப்பு நன்கொடைகள் உள்ளிட்ட கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக மாநிலத்தின் துணை நிறுவனம் RM10 மில்லியனுக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்தது.
முன்னதாக, 2021 முதல் கடந்த ஆண்டு வரை கல்வி நிறுவனங்களுக்கு RM25.5 மில்லியன் உதவி வழங்கியதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.




