ஷா ஆலம், பிப் 7- இவ்வார இறுதியில் கொண்டாடப்படவிருக்கும்
சீனப்புத்தாண்டை முன்னிட்டு இம்மாதம் 17 மற்றும் 18ஆம் தேதிகளில்
இன ஒற்றுமை விழா இங்குள்ள ஐ-சிட்டியில் நடைபெறவுள்ளது.
கூட்டரசு அரசாங்கத்தின் மலேசியா மடாணி கோட்பாட்டிற்கு ஏற்ப நாட்டில்
இன ஒற்றுமையை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்ட இந்த
நிகழ்வுக்குத் தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதாக ஐ-
சிட்டி நிர்வாகம் கூறியது.
அந்த ‘டிஜிட்டல் விளக்குகளின் நகரத்தில்‘ ஒரு மாதக் காலத்திற்குக்
கொண்டாடப்படவுள்ள சீனப்புத்தாண்டையொட்டி இந்த ஒற்றுமை விழா
நடத்தப்படுவதாக ஐ-சிட்டி இயக்குநர் மினோகா ஓங் கூறினார்.
இந்த விழாவை முன்னிட்டு இரு பிரதான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு
நடைபெறவுள்ள வாணவெடி சாகசம் மற்றும் மறுநாள் காலை 7.00
மணிக்கு நடைபெறவுள்ள ஒற்றுமை நடைப்பயணம் ஆகியவையே
அவ்விரு நிகழ்வுகளாகும் என அவர் சொன்னார்.
இவை தவிர, தற்காப்புக் கலை கண்காட்சி, ஆடை அலங்கார கண்காட்சி,
திறந்த வெளி சினிமா, கலாசார நிகழ்வுகள் ஆகியவை இந்த இன
ஒற்றுமை விழாவில் நடைபெறவிருக்கும் இதர அங்கங்களாகும் என்றார்
அவர்.
இந்த ஒரு மாதக் காலக் கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் பெருநாள்
சூழலைப் பிரதிபலிக்கும் ஒளி, ஒலி படைப்புகளை அனுபவிப்பதற்கும்
டிஜிட்டல் ஸ்போர்ட்ஸ் அரேனா, இம்மெர்சிவ் விண்டர்லேண்ட், ரேஸ்
கார்ட்டிங் போன்ற கவர்ச்சிகரமான இடங்களை காண்பதற்கும் வாய்ப்பு
கிட்டும் என அவர் கூறினார்.




