ஷா ஆலம், பிப் 7- மூன்று கட்டங்களை உள்ளடக்கிய ஷா ஆலம்
விளையாட்டுத் தொகுதியின் (கே.எஸ்.எஸ்.ஏ.) கட்டுமானப் பணிகள் எதிர்வரும்
2029ஆம் ஆண்டு முழுமையாகப் பூர்த்தியடையும் என்று எம்.பி.ஐ.
எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் சிறப்புத் திட்டப் பிரிவு தலைமை
நிர்வாகி கூறினார்.
தற்போதுள்ள அரங்கை இடித்து புதிய அரங்கை மறுநிர்மாணிக்கம் திட்டம்
இம்மாதம் தொடங்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 2026ஆம் ஆண்டு டிசம்பர்
மாதம் இப்பணிகள் முழுமையடையும் என்று டத்தோ இஞ்சினியர்
ருஸ்லான் அப்துல் அஜிஸ் கூறினார்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள பழைய அரங்கை இடிக்கும் பணிகள்
அடுத்தாண்டு மார்ச் மாதம் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக வளாகங்கள், கார் நிறுத்துமிடத் தொகுதி ஆகியவற்றை
உள்ளடக்கிய விளையாட்டரங்கம் எதிர்வரும் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
முடிவடையும்.
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ள இரண்டாம் கட்டப்
பணி உள்ளரங்கம், இளைஞர் மற்றும் விளையாட்டுப் பிரிவு மற்றும்
பொழுது போக்கு பகுதிகளின் நிர்மாணிப்பை உள்ளடக்கியிருக்கும்.
வரும் 2028ஆம் ஆண்டு தொடங்கி 2029 டிசம்பர் வரை மேற்கொள்ளப்படவுள்ள மூன்றாம் கட்டப் பணியின் போது ஒருங்கிணைந்த முனையம் மற்றும் ஹோட்டல் ஆகியவை நிர்மாணிக்கப்படும் என்றார் அவர்.
ஷா ஆலம் விளையாட்டரங்க மேம்பாடு தொடர்பில் எம்.பி.ஐ. மற்றும்
செம்பாரான் புரோஸ்பெக் நிறுவத்திற்கும் இடைய ஒப்பந்தம்
கையெழுத்திடும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்குள்ள டாருள் ஏஹ்சான் கட்டிடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு பிரமுகராகக் கலந்து
கொண்டார்.




