கோலாலம்பூர், பிப் 7- யுனெஸ்கோ உலக பாரம்பரிய பகுதி அந்தஸ்துக்கு
சிலாங்கூரிலுள்ள சீனப் புதுக்கிராமங்களைப் பரிந்துரைக்கும் திட்டத்தை
இன விவகாரமாக்க வேண்டாம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.
பரிந்துரை நிலையில் மட்டுமே உள்ள இந்த விவகாரத்தை
பூதாகரமாக்குவது ஆரோக்கியமற்றதாகும். பல்லின மக்களைக் கொண்ட
நாட்டில் நல்லிணக்கத்திற்கு இதனால் எந்த நன்மையும்
விளையப்போவதில்லை என்று அவர் சொன்னார்.
அனைத்து சீனப் புதுக்கிராமங்களையும் ஆர்ஜிதம் செய்ய நாங்கள்
திட்டமிடவில்லை. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழைமை வாய்ந்த
கிராமங்களாக இருக்கும் பட்சத்தில் உலு லங்காட்டில் உள்ள ஜியோ பார்க்
மற்றும் மலாய் கிராமங்களை உள்ளடக்கிய கோம்பாக்-உலு லங்காட்
ஜியோ பார்க் பகுதியை போலவே இவற்றையும் ஆர்ஜிதம் செய்வோம்
என்று அவர் சொன்னார்.
ஜியோபார்க்கை பொறுத்த வரை கம்போங் குவாங், கம்போங் குண்டாங்,
செலாயாங் வட்டாரம், பத்து கேவ்ஸ், கம்போங் கெமன்சே ஆகியவை
தேசிய புவியில் பூங்காவாக ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன. அடுத்தக்
கட்டமாக அவற்றை யுனெஸ்கோ பாரம்பரிய பகுதியாகப்
பிரகடனப்படுத்துவோம் என்றார் அவர்.
இவை யாவும் நீண்ட காலத்திற்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டு விட்டன.
இதன் பலன்களை அவர்கள் (விமர்சனம் செயவோர்) பார்ப்பதில்லை.
குறுகிய கால அரசியல் லாபத்திற்காக விஷயத்தைத் திசை
திருப்புகின்றனர். நாட்டின் நிலைத்தன்மைக்கும் இன நல்லிணக்கத்திற்கும்
இதனால் எந்த நன்மையும் கிட்டாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த பரிந்துரை குறித்து பெரிக்கத்தான் நேஷனல் நாடாளுமன்ற
உறுப்பினர் அகமது பைசால் வான் அகமது கமால் கேள்வியெழுப்பியது
தொடர்பில் அமிருடின் இவ்வாறு கருத்துரைத்தார்.




