கோலாலம்பூர், பிப் 7- எதிர்வரும் 2025ஆம் ஆண்டிற்குள் சிலாங்கூரை விவேக
மாநிலமாக்கும் இலக்கை விரைவுபடுத்துவதற்குத் தொலைத் தொடர்பு
நிறுவனங்கள் மற்றும் ஊராட்சி மன்றங்களுடன் மாநில அரசு பேச்சு
நடத்தவுள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பங்கேற்பின் வாயிலாக மாநில
அரசின் இலக்கவியல் உருமாற்றப் பணிகளை விரிவுபடுத்த முடியும்
என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மேலாண்மை தொழிலியல் பூங்கா மற்றும் ஸ்மார்ட் தொழிலியல்
பூங்காவை நாங்கள் உருவாக்க விரும்புகிறோம். நிச்சயமாக 5ஜி இதன்
முக்கிய உந்து சக்தியாக விளங்கும் என்று அவர் மேலும் சொன்னார்.
நேற்று இங்கு நடைபெற்ற செல்கோம்டிஜி பெர்ஹாட் மற்றும் அம்பாங்
ஜெயா நகராண்மைக் கழகம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்திடும் சடங்கில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இதனைத் தெரிவித்தார்.
இலக்கவியல் உருமாற்றத்தை விரைவுபடுத்துவது மற்றும் எம்.பி.ஏ.ஜே.
கீழ் முதலாவது விவேக நகராக உலு கிளாங் மாவட்டத்தை
உருவாக்குவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த புரிந்துணர்வு
ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இதனிடையே, மாநிலத்திலுள்ள இலக்கவியல் தொழில்நுட்பத்தை
மேம்படுத்துவதற்கும் புதுமைகளைப் புகுத்துவதற்கும் புதிய வாய்ப்புகளை
இந்த ஒத்துழைப்பு வாய்ப்பினை வழங்குகிறது என்று செல்கோம்டிஜி
தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ இட்ஹாம் நவாவி கூறினார்.




