புத்ராஜெயா, பிப் 6: கடந்த ஜனவரி 21 முதல் 27 வரையிலான 4வது தொற்றுநோயியல் வாரத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 3,781ஆகக் குறைந்துள்ளது, ஆனால், ஏழு இறப்புகள் ஏற்பட்டுள்ளன. முந்தைய வாரத்தில் 3,971 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8,968 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. மேலும், இவ்வாண்டு டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,458 ஆகும் என சுகாதார தலைவர் ஜெனரல் டத்தோ டாக்டர் முகமட் ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.
"இக்காலக்கட்டத்தில்148 ஹாட்ஸ்பாட்' இடங்கள் பதிவாகியுள்ளன," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சிலாங்கூரில் (124), கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் (14), நெகிரி செம்பிலானில் (5), பேராக்கில் (3), பினாங்கு மற்றும் சபாவில் தலா ஒரு இடம் என பதிவாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஏடிஸ் கொசுக்கள் பெருகும் இடங்களை ஒழிக்க போராடும் முயற்சியாக ஒவ்வொரு மாதமும் நான்காவது வாரத்தின் சனிக்கிழமையும் மேற்கொள்ளப்படும் 'ஒரு மணி நேர மலேசியாவைச் சுத்தப்படுத்துதல்' திட்டத்திலும் குப்பை சேகரிப்பு (கூடா) நடவடிக்கையிலும் உள்ளூர் சமூகம் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
இது போன்ற நடவடிக்கைகள் உடலை ஆரோக்கியமாகவும், மனதை புத்துணர்ச்சி அடையச் செய்யவும், சுற்றுச் சூழலைப் பாதுகாத்து சுத்தமாக வைத்திருக்கவும், ஏடிஸ் இனப் பெருக்கத்திலிருந்து விடுபடவும் மக்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற மறைமுகமாக ஊக்குவிக்கும் என்றார்.
– பெர்னாமா




