ஷா ஆலம், பிப் 6: நதி நீர் சுத்திகரிப்புத் திட்டத்தின் பராமரிப்புக்காக சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூருக்கு இடையேயான கிள்ளான் ஆற்று பகுதியை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
இது எதிர் காலத்தில் கோலாலம்பூர் நகர மன்றம் மற்றும் சிலாங்கூரில் உள்ள நகராண்மைக் கழகங்களிடையே ஆறு மேம்பாட்டு பணி அம்சங்களில் கவனம் செலுத்துவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உதவும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு, கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் இறுதி செய்யப்பட்ட இடங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தப்படும்.
அதன் பின் கவனிக்கப்படாத நிலப் பகுதிகள் அல்லது தெளிவான பிரிவு இல்லாத பகுதிகள் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த இந்த பிரிவு முக்கியமானது," என்று அவர் கூறினார்.
இங்குள்ள மாநில அரசு நிர்வாகக் கட்டிடத்தில் அமைச்சர் (கூட்டாட்சிப் பகுதி) டாக்டர் ஜாலிஹா முஸ்தபாவைச் சந்தித்துப் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், 19 பகுதிகளை உள்ளடக்கிய சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் எல்லை நிர்ணய பிரச்சனையின் தீர்வு குறித்து அமிருடினும் ஜாலிஹாவும் விவாதம் நடத்தினர்.
பிபிடி மூலம் மதிப்பீட்டு வரி செலுத்துதல் மற்றும் பகுதி பராமரிப்பு குறித்து கவனம் செலுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடப்படும் என்றார்.




