ஷா ஆலம், ஜன 22- ஷா ஆலம் வட்டாரத்திலுள்ள அனைத்து வர்த்தக வளாக உரிமையாளர்களும் எதிர்வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி சொந்தமாகக் குப்பைத் தொட்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்துக் குப்பைத் தொட்டிகளும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக அதாவது எளிதில் நகர்த்தக் கூடியவையாக (எம்.ஜி.பி.) இருக்க வேண்டும் என்று ஷா ஆலம் மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
மேல் மாடியில் உள்ள அலுவலகங்கள் மற்றும் கீழ்த்தளத்தில் உள்ள வர்த்தக வளாகங்கள் எம்.ஜி.பி. 240 லிட்டர் குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். உணவகங்கள் 600 லிட்டர் கொண்ட குப்பைத் தொட்டிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
2007ஆம் ஆண்டு (எம்.பி.எஸ்.ஏ.) குப்பை சேகரிப்பு, அகற்றல் மற்றும் அழிப்பு துணைச் சட்டத்தின் கீழ் இந்த விதிமுறை அமல்படுத்தப்படுகிறது. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர் மன்றம் தெரிவித்தது.




