ஷா ஆலம், ஜன 19: எதிர்வரும் பிப்ரவரி 23 முதல் 25 வரை மாநில அளவிலான ஜெலாஜா மடாணி நிகழ்வு கோலா சிலாங்கூர் அரங்கத்தில் நடைபெறும்.
இந்த மூன்று நாள் நிகழ்ச்சி, சிலாங்கூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மக்கள் நலன் திட்டங்களைப் பரப்புவதற்கான ஒரு தளமாக இருக்கும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
"மாநில திட்டமிடல் பற்றி புரிந்து கொள்ளாத மற்றும் அறியாத குடியிருப்பாளர்கள் இன்னும் உள்ளனர். எனவே இது அவர்களுக்கு விளக்குவதற்கான சிறந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
"மேலும், இந் நிகழ்வின் இறுதி நாளில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் டிஜிட்டல் பள்ளியின் 31 மாணவர்களின் பட்டமளிப்பு விழாவுக்கு பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
மாநில அளவிலான ஜெலாஜா மடாணி தொடரை நடத்தும் முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்கும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் புக்கிட் ஜாலில் அரங்கத்தில் ஒற்றுமை அரசாங்கத்தின் ஓராண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியப் பிறகு, மாநில அளவில் ஜெலாஜா மடாணி நிகழ்வை ஏற்பாடு செய்ய பிரதமர் ஒப்புக்கொண்டார் என ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளரான ஃபஹ்மி தெரிவித்தார்.




