சுபாங் ஜெயா, ஜன 19- சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் (எம்.பி.எஸ்.ஜே.)
2024-2025 தவணைக்கான புதிய உறுப்பினர்களாக ஏழு இந்தியர்கள் உள்பட
23 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனத்தில் ஐந்து பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள எம்.பி.எஸ்.ஜே. தலைமையகத்தில் நடைபெற்ற பதவியேற்புச்
சடங்கில் அனைத்து 23 உறுப்பினர்களும் சுபாங் ஜெயா டத்தோ பண்டார்
டத்தோ முகமது பவுஸி முகமது யாத்திம் முன்னலையில் பதவி உறுதி
மொழி எடுத்துக் கொண்டனர்.
புதிதாக நியமனம் பெற்ற மாநகர் மன்ற உறுப்பினர்களில் பாலச்சந்தர்
நாய்க்கர் (ஜசெக), கே. குணசுந்தரி (பி.கே.ஆர்.), எம்.பிரவின் (பி.கே.ஆர்.),
இ.மேகநாதன் (ஜசெக), ஆர்.பரிதிவாணன் (பி.கே.ஆர்.) எம்.அன்பரசன்
(பி.கே.ஆர்.) எஸ். தமிழரசு (ஜசெக) ஆகியோர் இந்தியப் பிரதிநிதிகள்
என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய முகமது பவுஸி, புதிய
தவணைக்கு நியமிக்கப்பட்ட மாநகர் மன்ற உறுப்பினர்கள் சிறப்பான
சேவையை வழங்கும் அதேவேளையில் மக்கள் முன்வைக்கும்
பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு காணவும் வேண்டும் எனக் கேட்டுக்
கொண்டார்.
பழைய மற்றும் புதிய உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த குழு 2020-2025
சுபாங் ஜெயா வியூக திட்டத்தின் அமலாக்கத்திற்கு பெரிதும் துணை
புரியும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.
சிறந்த மற்றும் மக்களால் மதிக்கக்கூடிய ஊராட்சி மன்றமாக விளங்கும்
வகையில் மாநகர் மன்ற உறுப்பினர்களும் ஊழியர்களும் மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.




