ஷா ஆலம்-ஜன 18 - இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா, செக்ஷன் 25 ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற காணும் பொங்கல் விழாவை கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் ச.பிரகாஷ் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
தைப்பொங்கலின் மூன்றாவது நாளில் நடைப்பெற்ற காணும் பொங்கல் வைபவத்தில் 21 கன்னி பெண்கள் மண் பானையில் பொங்கலை வைத்து அம்மனுக்குக் காணிக்கையாக படைத்தனர்
கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் உரையாற்றிய பிரகாஷ், கோத்தா கெமுனிங் சட்டமன்ற அலுவலகத்தின் ஏற்பாட்டில் மூன்று இடங்களில் பொங்கலை விழாவை நடத்தி முடித்துள்ளோம் என்றார்.
கடந்த திங்கள் கிழமை ஆலம் மேகா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சூரிய பொங்கலும்,
செவ்வாய்க்கிழமை கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மாட்டு பொங்கலும் புதன்கிழமை காணும் பொங்கலும் நடைபெற்றன என அவர் கூறினார்.
இந்த பொங்கலை முன்னிட்டு கோத்தா கெமுனிங் தொகுதியில் உள்ள வசதி குறைந்த 100 பேருக்குப் பொங்கல் பானைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் தன்னுடைய அலுவலக அதிகாரிகள் மிக சிறப்பாக இவ்விழாவினை ஏற்று நடத்தி உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பொங்கல் விழாவில் சிறந்த முறையில் பொங்கல் வைத்த மூன்று பேருக்கு மூக்குத்தி மற்றும் புடவையும் அன்பளிப்பாக வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
நமக்கு உணவு கிடைப்பதற்குக் காரணமான விவசாயத்திற்கும் விவசாயம் சார்ந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி சொல்லும் இந்திருநாளில் அனைவருக்கும் நன்றி சொல்லி பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் மேலும் கூறினார்.




