ஷா ஆலம், ஜன 16- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று மேலும் மூன்று தொகுதிகளில் நடைபெறவுள்ளது.
தஞ்சோங் சிப்பாட் தொகுதி நிலையிலான இந்த விற்பனை ஆத்தோய்பின் எண்டா பள்ளிவாசல் வளாகத்தில் இன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் என்று பி.கே.பி.எஸ். தனது பேஸ்புன் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், செமெந்தா தொகுதியின் கம்போங் பிரப்பாட் சமூக மண்டபத்திலும் பந்திங் தொகுதியின் சமூக சேவை மையத்திலும் இந்த விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அது கூறியது.
இரண்டு வார ஓய்வுக்குப் பிறகு நேற்று தொடங்கி மீண்டும் இந்த மலிவு விற்பனை மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது. மூன்று தொகுதிகளில் இன்று நடைபெறும் மலிவு விற்பனையில் 1,500 கோழிகளை பி.கே.பி.எஸ். விற்பனைக்கு வைத்துள்ளது.
இவ்வாண்டு நாடு முழுவதும் உள்ள 1,800 இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்படும் என்று பி.கே.பி.எஸ். விற்பனைப் பிரிவு தலைமை நிர்வாகி முகமது ஃபாஸீர் அப்துல் லத்திப் முன்னதாக கூறியிருந்தார்.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
நோன்புப் பெருநாளின் போது கோழி மற்றும் முட்டையை மலிவு விலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ததற்காக பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.
ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.


