ஷா ஆலம், ஜன 11- கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து
வரும் 10 கோடி வெள்ளி கடன் பாக்கியை வசூலிப்பதில் யாயாசான்
ஹிஜ்ரா அறவாரியம் இவ்வாண்டு மிகத் தீவிரமாகச் செயல்பட்டு
வருகிறது.
இந்த சூழல் நிதியைக் கொண்டு புதிய தொழில்முனைவோருக்கு
கடனுதவி வழங்குவதற்கு ஏதுவாக 16,000 ஹிஜ்ரா உறுப்பினர்களிடமிருந்து
கடன் பாக்கியை வசூலிக்க வேண்டியுள்ளதாக அந்த அறவாரியத்தின்
தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ மேரியா ஹம்சா கூறினார்.
இந்நோக்கத்திற்காக இரு புதிய திட்டங்களான கடன் வசூல் முகவர் முறை
மற்றும் கடன் அழைப்பு மையம் ஆகியவை கடந்தாண்டு செப்டம்பர்
முதல் அமல்படுத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
நிலுவையில் உள்ள அனைத்துக் கடன் பாக்கியையும் திரும்பப் பெறுவதில்
இவ்வாண்டில் தீவிரமாகச் செயல்படவுள்ளோம். இந்த திட்டத்தை
செயல்படுத்துவதற்கு வசூல் முகவர் முறை மற்றும் கடன் அழைப்பு
முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றார் அவர்.
கடன் தொகை முறையாக திரும்பச் செலுத்தப்படுவதை உறுதி செய்ய
புதிதாக கடனுக்கு விண்ணப்பம் செய்யும் தொழில்முனைவோருக்கு
கடுமையான நிபந்தனைகளை விதிப்பதற்கான சாத்தியத்தையும்
மறுப்பதற்கில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள சீடேக் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற 2023ஆம்
ஆண்டிற்கான கடனைத் திரும்பச் செலுத்தி பரிசு பெறும் பிரசார
இயக்கத்தின் முதன்மைப் பரிசுக்கான குலுக்கல் நிகழ்வில் கலந்து
கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஹிஜ்ராவில் கடன் பெற்ற சுமார் 300 பேர் ஒரு முறை கூட தவணைப்
பணத்தை திரும்பச் செலுத்தவில்லை எனக் கூறிய அவர், அவர்களின் பெயர் தகவல் சேவை மையமான சித்தோஸில் கருப்பு பட்டியலிடப்பட்டுள்ளது என்றார்.
கடனைத் திரும்பச் செலுத்துவதை எளிதாக்குவதற்கு ஏதுவாக கடனைச்
செலுத்தும் முறையில் மறுசீரமைப்பு செய்வதற்கான வாய்ப்பினையும்
ஹிஜ்ரா அறவாரியம் வழங்குகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.




