கிள்ளான், ஜன 10 - மாநிலத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களில் கடந்தாண்டு
மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அளவிலான சாலை செப்பனிடும்
பணிகளை மாநில அரசு இவ்வாண்டும் தொடரும் என்று அடிப்படை
வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.
மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் இதர பணிகளில் சாலைகளில்
எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்துவதும் அடங்கும் என்று இஞ்சினியர்
இஷாம் ஹஷிம் சொன்னார்.
மெகா சாலை சீரமைப்புத் திட்டம் தவிர்த்து சிவப்பு வண்ண தூண்களில்
எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்தும் திட்டத்தையும் நாங்கள்
தொடரவிருக்கிறோம். எனினும், அத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி
இவ்வாண்டு வேறுபடும் என்று அவர் குறிப்பிட்டார்.
உதாரணத்திற்குச் சாலைகளை செப்பனிடும் பணிக்காகக் கடந்த முறை
நாங்கள் 5 கோடி வெள்ளியைச் செலவிட்டோம். ஆனால் இம்முறை அந்த
தொகை 2 கோடி வெள்ளியாகக் குறைக்கப்படும் என்றார் அவர்.
இது சிறந்த திட்டம் என்பதால் மக்கள் நலன் கருதி அதனை தொடர
வேண்டும் எனக் கூறிய அவர், இவ்விரு திட்டங்களுக்கான நிதி
ஒதுக்கீட்டை தாம் விரைவில் அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
அக்ரோப்ரீனியர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ இங்குள்ள சுங்கை சீரே
படகுத் துறையில் நேற்று ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு
மீன் பிடி உபகரணங்கள் மற்றும் உணவுக் கூடைகளை வழங்கியப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சாலை சீரமைப்பு மற்றும் தெரு விளக்குகளைப் பொருத்தும் திட்டங்கள்
இம்முறை மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற
உறுப்பினர்கள் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்
தெளிவுபடுத்தினார்.
முன்பு இத்திட்டங்கள் ஊராட்சி மன்றங்களின் மேற்பார்வையில்
மேற்கொள்ளப்பட்டன. இம்முறை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்
நகராண்மைக் கழக உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் நாடும்படி கேட்டுக்
கொண்டுள்ளோம் என்றார் அவர்.




