ஷா ஆலம், ஜன 8 - மக்களின் நலன் காப்பதை நோக்கமாகக் கொண்ட
மத்திய அரசின் ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்தின் (எஸ்.டி.ஆர்.) கீழ் 100
கோடிக்கும் மேல் சிலாங்கூர் மாநில மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, நடப்பு அரசாங்கம் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு
பிரச்சனைகளுக்கு அது தீர்வு கண்டுள்ளது. குறிப்பாக அத்தியாவசியப்
பொருள்கள் நியாயமான விலையில் இருப்பதை உறுதி செய்வதில்
பெரிதும் உதவியுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.
இன்றைய அரசாங்கம் பணியை முறையாக செய்யும் அரசாங்கமாக
விளங்குவதை இது காட்டுகிறது என்று தனது அதிகாரப்பூர்வச் சமூக
ஊடகத்தில் பதிவேற்றிய காணொளி ஒன்றில் அவர் தெரிவித்தார்.
மாநில அரசு பல மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தியுள்ளதாகக்
கூறிய அவர், இல்திஸாம் சேஹாட் சிலாங்கூர், காப்புறுதித் திட்டம்
மற்றும் அனைத்து பள்ளிகளுக்கான நிதியுதவி ஆகியவையும் அவற்றில்
அடங்கும் என்றார்.
இது தவிர, சிலாங்கூரிலுள்ள அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களுக்கும்
மானியம் வழங்கப்படுகிறது. மேலும் அந்த வழிபாட்டுத் தலங்களுக்கு
நிலத்தையும் ஆர்ஜிதம் செய்து தருகிறது. இதன் மூலம் அந்த
நிலங்களுக்கு பிரீமியத் தொகையை செலுத்த வேண்டிய அவசியம்
இல்லை என அவர் தெரிவித்தார்.
நில பிரீமியத் தொகை விவகாரம் முன்பு ஒரு பிரச்சனையாக இருந்து
வந்த காரணத்தால் வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்க இயலாத சூழல்
ஏற்பட்டது என்றார் அவர்.
கடந்த 2008ஆம் ஆண்டில் பதவிக்கு வந்தது முதல் மாநில
பொருளாதாரத்தை மக்கள்மயமாக்கும் கருப்பொருளில் ஏழு சமூக நலத்
திட்டங்கள் அமல்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த திட்டங்கள் கடந்த 2017ஆம் ஆண்டில் பெடுலி ராக்யாட்
முன்னெடுப்பின் கீழ் 43 திட்டங்களாக அதிகரிக்கப்பட்டன. பின்னர் கடந்த
2019ஆம் ஆண்டில் அவை ஒருமுகப்படுத்தப்பட்டு 33 திட்டங்களாக ஆயின.
தற்போது இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐ.எஸ்.பி.)
முன்னெடுப்பின் கீழ் 60 கோடி வெள்ளிக்கும் மேற்பட்ட தொகையில் 46
சமூக நலத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அவர்
சொன்னார்.




