ஷா ஆலம், ஜன 2- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்
(பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனைத்
திட்டம் இவ்வாண்டு மாநிலம் முழுவதும் உள்ள 1,800க்கும் அதிகமான
இடங்களில் நடைபெறள்ளது.
இவ்வார இறுதி நாட்களில் மாநிலத்திலுள்ள செகி ப்ரெஷ் பேரங்காடிகளில்
நடைபெறும் மாநில அரசின் மலிவு விற்பனை இந்த எண்ணிக்கையில்
உள்ளடங்காது என்று பி.கே.பி.எஸ். தலைமை நிர்வாகி முகமது பாஸிர்
அப்துல் லத்திப் கூறினார்.
இவ்வாண்டில் 1,800க்கும் அதிகமான இடங்களில் மலிவு விற்பனையை
நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். உள்நாட்டு வாணிக மற்றும்
வாழ்க்கைச் செலவின அமைச்சுடன் இணைந்து தினசரி குறைந்தது நான்கு
இடங்களில் இந்த மலிவு விற்பனையை நடத்த நாங்கள்
திட்டமிட்டுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தின் கீழ் மேலும் அதிகமானோர் பயன் பெறுவதற்கு ஏதுவாக
கூடுதலான செகி ப்ரெஷ் பேரங்காடிகளில் இந்த திட்டத்தை
மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை நடத்துவதற்கு சட்டமன்ற
உறுப்பினர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கிராமத்
தலைவர்கள் இணையம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த
விண்ணப்பம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர்
தெரிவித்தார்.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட்
முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00
வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு
கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம்
முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு
விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர்
பயனடைந்துள்ளனர்.
நோன்புப் பெருநாளின் போது கோழி மற்றும் முட்டையை மலிவு
விலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ததற்காக
பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.
ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை
பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள
கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது
http://linktr.ee/myPKPS என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும் அறிந்து
கொள்ளலாம்.




